ஆயுதங்கள் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தில் வல்லமைமிக்க இஸ்ரேல், நீர்ப்பாசன தொழில்நுட்பங்களிலும் சர்வதேச அளவில் பிரபலமானது.
பாலைவனத்தில் பசுமையை கொண்டுவரமுடியும் என்ற அற்புதத்தை உலகிற்கு நிகழ்த்திக் காட்டிய நாடு இஸ்ரேல்.
இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், நீர்ப்பாசனத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் உருவாகும் என்று பரவலாக நம்பப்படுகிறது.
தண்ணீரின் ஒரு துளியைக் கூட வீணடிக்காமல் இருக்கும் பண்பை இஸ்ரேலிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் இஸ்ரேல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது.
இஸ்ரேலில் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரில் பாதியளவு மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுநீர் என்பது குறிப்பிடத்தக்கது.
1. காற்றில் இருந்து நைட்ரஜனை உறிஞ்சும் தன்மை கொண்ட மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவையே இஸ்ரேலில் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களின் வழியாக நைட்ரஜன் சத்து, நிலத்திற்கு இயல்பாகவே செல்கிறது. இந்த உபாயம் எந்தவித செலவும் இல்லாமல் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. இந்த அமைப்புமுறை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பயனளிக்கக்கூடியது.
2. இஸ்ரேலின் சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பம். பயிருக்கு துளித்துளியாக தொடர்ந்து நீர் வழங்கப்பட்டால், சாகுபடி சிறப்பாக இருக்கும் என்ற யோசனையே இதன் அடிப்படை. இந்த முறையில் தண்ணீர் நேரடியாக நிலத்திற்கு செலுத்தப்படும் அல்லது பயிரின் வேருக்கு அருகில் விடப்படும்.
3. பயிரின் கீழ்பாகம் வரை தண்ணீர் செல்வதற்காக குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தண்ணீரை குறைந்த அளவு பயன்படுத்தி, அதில் இருந்து அதிக பயன்களைப் பெறுவது இதன் நோக்கம். மணற்பாங்கான பாலைவனப் பகுதியில் நல்ல தண்ணீர் அதிகம் கிடைக்காத நிலையில், பசுமையை கொண்டு வர சொட்டு நீர்ப்பாசனம் தான் அடிப்படை காரணியாக இருக்கிறது.
4. பிற நாடுகளில் ஆற்றல் பயன்பாடுகளுக்காக மரம் வெட்டப்படும் நிலையில், இஸ்ரேல் சூரியசக்தி மூலம் தனது ஆற்றல் தேவைகளை நிறைவேற்றுகிறது.
5. உவர்நீர் மற்றும் தரம் குறைந்த நீரிலும் விளையக்கூடிய பயிர்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆலிவ் முதல் அர்கன் வரையிலான மரங்களுக்கு இவற்றையே பயன்படுத்துகிறார்கள்.
6. பாலைவனப் பகுதிகளில் வளரும் பயிர்களிலும் இஸ்ரேலியர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பாலைவனத்தில் பணத்திற்காகவும், புரேட்டின் சத்துக்காகவும் மீன்வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்கு உவர்நீரே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில், உவர் நீருக்கு உகந்த விவசாயம் மேற்கொள்வதால், அங்கு விவசாயம் உவப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாலைவனத்திலும் பசுமை பூத்துக்குலுங்குகிறது.
No comments:
Post a Comment