Menu

Wednesday 9 August 2017

கோவில்பட்டி தாலுகாவில் ஸ்மார்ட் கார்டு பெறாதவர்கள் குடும்ப தலைவர் புகைப்படத்தை ஆக.11 சிறப்பு முகாமில் அளிக்கலாம்

கோவில்பட்டி: கோவில்பட்டி தாலுகாவில் ஸ்மார்ட் குடும்ப அட்டை பெறாதவர்கள் குடும்ப தலைவரின் போட்டோவை ஆக.11ம் தேதி தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் பங்கேற்று அளிக்கலாம் என தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் இல்லாத பழைய ரேஷன்கார்டுகளை முழுமையாக அகற்றிடும் பொருட்டு, பழைய காகித வடிவிலான ரேஷன்கார்டுகளுக்கு பதிலாக தற்போது நவீன வடிவில் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கோவில்பட்டி தாலுகாவில் பயன்பாட்டில் உள்ள 65 ஆயிரத்து 504 ரேஷன் கார்டுதாரர்களில் இதுவரையில் 43 ஆயிரத்து 68 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 66 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது குடும்பத்தலைவரின் புகைப்படங்களை இன்னும் கொடுக்காமல் இருப்பதால் ஸ்மார்ட் கார்டுகளை தயார் செய்து வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதனை நிவர்த்தி செய்து அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகளை தாமதமின்றி துரிதமாக வழங்கிடும் பொருட்டு வரும் 11ம் தேதி கோவில்பட்டி தாலுகா அலுவலத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. போட்டோவை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் போட்டோ மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் கொண்டு வந்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் குடும்ப தலைவர் போட்டோவை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment