Menu

Wednesday 9 August 2017

PUBLICITY TREND

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்றதாக பொய் தகவல்: புனே போலீஸ் தம்பதி பணி நீக்கம்

 உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உச்சிக்கு சென்றதாக பொய்யான தகவல் தெரிவித்த போலீஸ் தம்பதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகர காவல் துறையில் பணி புரியும் தினேஷ் மற்றும் அவரது மனைவி தரகேஷ்வரி ரத்தோட் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு மே 23-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்ததாக தெரிவித்தனர். இதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் நேபாள சுற்றுலாத் துறையில் சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில் இந்த தம்பதிக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனிடையே, இந்த தம்பதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது குறித்து சக மலையேற்ற வீரர்கள் சந்தேகம் எழுப்பினர். குறிப்பாக அவர்கள் சமர்ப்பித்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டைவை என தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய நேபாள சுற்றுலாத் துறை, எவரெஸ்ட் சிகரத்தில் ஏற இருவருக்கும் 10 ஆண்டு தடை விதித்தது. இந்நிலையில், இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு புனே காவல் துறை உத்தரவிட்டிருந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து புனே நகர காவல் கூடுதல் ஆணையர் சாஹிப்ராவ் பாட்டீல் கூறும்போது, “தினேஷ் தம்பதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக தவறான தகவல் கொடுத்தது விசாரணையில் நிரூபணமாகி உள்ளது. இதன் மூலம் இந்திய மற்றும் நேபாள அரசுகளை ஏமாற்றி உள்ளனர். இதையடுத்து, இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
சமீப காலமாக ஏவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகி உள்ளது.

கூகுளில் வேலை! நாட்டையே ஏமாற்றிய மாணவன் சிக்கியது எப்படி? 

 இந்தியாவை சேர்ந்த ரோஹித் சர்மா என்ற மாணவனுக்கு கூகுளில் ரூ.1.44 கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

சண்டிகரைச் சேர்ந்தவர் ஹர்ஷித் சர்மா, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் தொழில்நுட்ப பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவன் ஹர்ஷித்துக்கு பத்து வயதிலிருந்தே கிராபிக் டிசைனராக வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது.
இதனால் படிப்படியாக கிராபிக் டிசைனிங் கற்றுக்கொண்டதாகவும், படங்களுக்கு போஸ்டர்கள் செய்து பணம் சம்பாதித்தும் வந்துள்ளான்.
இந்நிலையில் கூகுளில் ரூ.1.44 கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்ததாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளான்.
இதுதொடர்பாக ஊடகங்களிலும் தகவல்கள் வெளியானது, ஆனால் இது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
இது மாணவனின் குறும்புத்தனம் என்றும், கூகுளில் அளித்தது போன்றே சான்றிதழையும் வழங்கியதால் பள்ளி ஆசிரியர் நம்பியதுடன் மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அளித்ததே செய்தி காட்டுத்தீ போல பரவ காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment